Tuesday, December 19, 2006

கற்றதனால் ஆன பயனென்ன.......(பாகம் 2)

இந்த இடுகையின் முதல் பாகத்தில் நண்பர் காந்தித் தொண்டன் ஒரு முக்கியமான
வாதத்தை முன்வைத்திருந்தார். "ஆணும் பெணும் சமம். ஆனால் பெண்
வீட்டிலிருப்பதையும், குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதையும் தாழ்வாகக் கருதக் கூடாது.
இன்றைய பெண்ணியவாதம் பெண் சமையல் செய்வதைத் தாழ்வாகக் கருதுகிறது இது
தவறு. பெண்ணுக்குப் பிள்ளைப் பேறும், மாதாந்திரத் தொல்லைகளும் இருப்பதால் அவளை
வீட்டில் இருக்கச் சமூகம் பணித்திருக்கலாம்" என்கிற அவரின் கருத்துக்களை
எடுத்துக்கொண்டு இந்த இடுகையை எழுதுகிறேன். நண்பர் சிவக்குமாரும் மேற்சொன்ன
கருத்துக்களை முன்பொருமுறை சக்தியில் எழுதியிருந்தார். ஆணும், பெண்ணும்
எல்லாவிதங்களிலும் சரியெனக் கருதி வாழ்ந்ததால் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் சில
உண்டு என்றும்கூடக் குறிப்பிட்டிருந்தார். சொல்ல வருவதை உள்வாங்கும் முயற்சியோடு,
பரிகசிப்பும், கிண்டலுமற்ற நாகரிகமான சொற்களில் உங்கள் தரப்புக் கருத்துக்களை
இப்படி மனம் விட்டு நீங்கள் எழுதுவதற்கு நன்றி.

முதலில் ஒரு விடயத்தை உங்களுக்குத் தெளிவாக்கிவிட விரும்புகிறேன். "
பெண்ணியவாதம் பெண் சமையல் செய்வதை அடிமைத்தனம் என்று சொல்கிறது." என்று
நீங்கள் எதனடிப்படையில் புரிந்து வைத்திருக்கிறீர்களோ தெரியவில்லை. வெவ்வேறு
துறைகளில் வெளியில் வந்து சாதித்த பெண்களிலிருந்து இதோ பெண்ணுரிமையை
விரும்புவதாக எழுதிக்கொண்டிருக்கும் சாதாரண மனுஷியான நான் வரைக்கும் சமையல்
தெரிந்தவர்கள்தான். கணவனுக்கு எது பிடிக்குமெனத் தெரிந்து, அதன் செய்முறையை
ஆர்வத்துடன் அறிந்து செய்துகொடுத்து மகிழ்வது எல்லாப் பெண்களுக்கும்
பிடித்தேயிருக்கும். "முறிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்" என்று பாராட்டப்பட்ட சங்கத்
தமிழச்சியின் காதலுக்கு எந்தவிதத்திலும் குறைந்ததில்லை இதோ இப்போது பாரதிராஜா
மகன் மனோஜுக்குச் சமைத்துப்போடுவதற்காக 725 ரெசிப்பிக்களை எழுதிவைத்துக்
காத்திருந்த இந்த நூற்றாண்டு நந்தனாவின் காதல். அப்படியிருக்க "பெண்கள் சமையல்
செய்வதை விரும்புவதில்லை" என்ற முடிவுக்கு நீங்களாக வருவதும், அதைத்தான்
பெண்ணியவாதம் பேசுகிறதென்று புரிந்துகொள்வதும் அபத்தமானது. பெண்ணியவாதம்
பேசவருவது வேறு. "உனக்கு அ, ஆ படிக்க வருவதுபோல் எனக்கும் வரும். உனக்கு
நிரலி எழுத முடிவதுபோல் எனக்கும் எழுதமுடியும். நீ வெளியில் போய்ப் பணிபுரிவதும்,
பொருளீட்டுவதும், பணி உயர்வுகளைப் பெறுவதும், வெளிஉலகில் உனக்கான
அங்கீகாரங்களோடு வாழ்வதுமாய் இருப்பதுமாதிரி நானும் செய்ய ஆர்வம் எனக்குண்டு. நீ
நினைப்பதைச் செய்ய நான் அனுமதிப்பதுபோல் அப்படி உன் மனைவியாகிய என்னை
அனுமதிக்க உனக்கு என்ன பிரச்சினை? உனக்கும், எனக்கும் நம் குழந்தைகளுக்கும்
சமைப்பது முதல், துவைப்பதுவரை அன்றாட அவசிய வேலைகள் செய்வதற்கு நான்
வீட்டிலிருந்தால் வசதியாக இருக்கும். நீ களைத்து வீடு வருகிறபோது உன்
வியர்வைதுடைத்துத் தேநீர் கொடுத்து ஆசுவாசப்படுத்த நானிருந்தால் நன்றாக இருக்கும்
என்கிற உன் நினைப்பு. அந்த நினைப்பு மட்டும் அழிந்தால் போதும். மற்றவை சுலபம்.".
நீங்கள் சரியாகப் புரிந்துகொண்டால் இதுதான் பெண்ணியவாதம்.

பெண் வேலைக்குப் போவதில் ஏற்படும் இழப்பு ஆண்களுக்கு அவள் வீட்டில் உள்ள நேரம்
குறைவதில் தொடங்குகிறது. வீட்டு வேலைகளில் மற்ற குடும்ப வேலைகளில் ஆண் தன்
பங்கை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் பெண் வேலைக்குப் போவதிலோ, அல்லது அவள்
தனக்கென்று ஒரு துறையைத் தேர்ந்தெடுப்பதிலோ உருவாகிறது. அப்படி நேருகிறபோது
ஒருவரின் பணிசார்ந்த சுமைகளை இன்னொருவர் உணர்ந்து, ஒருவருக்கொருவர்
உதவியாய் முழுதுமாய் அனைத்துப் பணிகளிலும் பங்கெடுத்து வாழும்போது அது
வெற்றிகரமாக நிகழும். ஆனால் வேலைக்குப் போனாலும் இவையெல்லாம் பெண்ணால்
மட்டுமே செய்யமுடியும் அல்லது செய்யவேண்டும் என்ற எண்ணம் அப்பிக்கிடக்கிற
மனமுள்ள இடத்தில், பணிசார்ந்து தன் கட்டுப்பெட்டித்தனங்கள் துறந்து அன்னிய
ஆண்களுடன் சமமாகவும், தோழமையுடனும் பெண் பழகுவதை சீரணிக்கமுடியாதவர்கள்
சுற்றியுள்ள வீட்டில் வேலைக்குப்போவது நிச்சயம் பெண்ணுக்கும், அவளைக்
கொண்டிருக்கும் குடும்பத்திற்கும் உவப்பாயிருக்க முடியாது. பிரச்சினைகள்
முளைப்பதற்கான களம் இதுதான். இதில் பிரச்சினைக்கு உண்மையான காரணம்
வீட்டிலிருந்த பெண் வேலைக்குப்போவதால் வீட்டில் ஏற்படும் அன்றாட
நடைமுறைகளின்பாலான மாறுதல்களை ஏற்கும் அளவு முதிராத மனங்களே! ஆனால் அதை
நோக்க விடுத்து, "வேலைக்குப்போவதால் திமிரெடுத்து, சமையல்செய்வதைத் தாழ்வாகக்
கருதி அதைத்தான் பெண்விடுதலை என்கிறார்கள்" என்று கொடிபிடித்துக்கொண்டிருந்தால்,
"எது உண்மை என்பதைப் புரிய முயற்சிக்காதவரை நீங்கள் புரிந்ததையே உண்மையென்று
நம்பியிருப்பீர்கள்" என்று மட்டும் சொல்லிச்செல்ல வேண்டியதுதான்.

இதில் இன்னொருவிடயமும் கவனிக்க வேண்டும். இரண்டுபேரும் வேலைக்குப்போவதால்
குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளவேண்டிய, அல்லது வேறு சில தவிர்க்கமுடியாத
கடமைகள் வீட்டில் தவறிப்போகிறதென வரும்போது யாருடைய வருமானமும்,
பணிநன்மையும் அதிகம் என யோசித்து, இன்னொருவர் வீட்டிலிருக்கவேண்டிவரும்.
இங்குதான் சமூகத்தின் முக்கியமான முகம் வெளிப்படும். பெண் வீட்டிலிருப்பது சமூகத்தால்
அங்கீகரிக்கப்பட்டது. ஆனால் ஆண் இருந்தால் அவனுக்குப் பெயர் பொண்டாட்டிதாசன்
அல்லது அது ஆணடிமை. தனிப்பட்டமுறையில் இப்போது சில ஆண்களே அப்படி
வீட்டிலிருப்பதை ஏற்று அவரின் மனைவி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தாலும் அதை
மற்றவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என்பதற்கு என் வலைப்பக்கத்தில் இட்டிருந்த
"கொழுகொம்பாகும் கொடிகள்" http://selvanayaki.blogspot.com/2006/07/blog-post_31.htmlஎன்ற பதிவில் வந்த சில பின்னூட்டங்களும், அதற்குப்
பிறகு அம்மாதிரி ஆண்களுக்குப் பொண்டாட்டிதாசன் பட்டம் வழங்கி எழுதப்பட்ட ஒரு
பதிவும் சாட்சிகள்.

மேற்குலகினை வசைபாடி நம் காலாசாரம், பண்பாடு குறித்துப் பெருமையடித்துக்கொள்வது
நமக்கு இயல்பென்றாலும் பெண்களும் வேலைக்குப்போகும் நிலைக்கு வந்தபிறகு
மேற்குலகில் வீடுகளிலும் மாற்றங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஒருநாளைக்கு இரண்டு
இடங்களில் பணி செய்யும் அமெரிக்கத் தோழியிடம் உன் குழந்தைகளோடு செலவிடும்
நேரம் குறைகிறதா? எனக் கேட்டபோது "என் கணவர் பகல் நேரத்தில் மட்டும் பணி
செய்கிறார். மாலை வீட்டிற்கு வந்துவிடும் அவர் இரவு உணவு தயார் செய்து
குழந்தைகளுக்கு ஊட்டித் தூங்க வைக்கிறார். நான் மாலை கிளம்பி மீண்டும் பணிக்குப்
போய்விட்டு இரவு வீடு திரும்புகிறேன். காலையில் உணவு தயாரித்து எல்லோருக்கும்
கொடுத்தனுப்புவது நான்" என்பதை இயல்பாகச் சொல்லமுடிகிறது அவரால். "moms at
home" போலவே "dads at home" பிரிவும் இயல்பாக, முக்கியமாக அண்டை
வீட்டுக்காரரின் ஏளன, இளக்காரப் பார்வைகளில்லாமல் இயங்க முடிகிறது இங்கு. இங்கிருக்கும் இந்திய நண்பர்களில் சிலரும் குழந்தைகளுக்கு வேண்டியது செய்து
பள்ளிக்கு அனுப்பித் தாங்களும் பணிக்குச் சென்றுகொண்டு, மனைவியை ஒரு தொலைதூர
ஊரில் படிக்கவைத்துக்கொண்டும் இருக்கிறார்கள். இதையே நம் ஊரில் நம் சமூகத்திலும்
கடைப்பிடிப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. பெண் படிப்பது, வேலைக்குப்போவதுவரை
ஏற்றுக்கொள்ள முடிந்த நாம், வீடுகளில் பெண்ணை இன்னும் அதே பழைய
கண்ணோட்டத்துடன்தான் பார்த்து வருகிறோம். அதன் விளைவுகள்தான் "வேலைக்குப்
போனால் கொம்பு வருமா? சமையல் செய்வது தாழ்வென்று பெண்கள் நினைக்கிறார்கள்"
என்கிற பல்லவிகள். நம் பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள், திரைப்படங்கள்
எல்லாவற்றிற்கும் பெண் குறித்து இதே எதிர்பார்ப்புகள்தான். இவை மாறவேண்டும் என்று
பேசினால், எழுதினால் இங்கு விழுகிற எதிர்வினைகள் "ஆணடிமைக்கு வித்திடுகிறார்கள்,
சமைப்பதைக் கேவலம் என்கிறார்கள், பெண்விடுதலை குறித்துப் பேசப் பயமாக
இருக்கிறது, அவர்கள் எல்லாம் வந்து சாத்திவிடுவார்கள்" என்கிற ரீதியில்
தொடர்ந்துகொண்டிருப்பதே நாம் பயணிக்கவேண்டிய தூரம் அதிகம் என்பதை
நினைவூட்டுபவையாக உள்ளன.

இதில் கையில் கேப்பைக்கஞ்சியுடன் வந்த நண்பர் கைப்புள்ளையும் (உங்களை இப்படி
அழைப்பது நகைச்சுவைக்காகவே. உண்மையில் உங்கள் நகைச்சுவை எழுத்து நடைக்கு
நான் நெடுநாளைய ரசிகை) சமீபத்தில் பெண்ணீயம் குறித்து இணையத்திலெல்லாம்
தேடிப்படித்து விட்டுக் கருத்துச் சொல்லியுள்ளார். http://kavithavinpaarvaiyil.blogspot.com/2006/12/with.html கூடவே ஒரு செண்டிமெண்ட்டல் அட்டாக் வேறு செய்துள்ளார், கருத்தம்மா பாத்திரத்தை வைத்து. "வயதான தகப்பனை, அதுவும் தனக்கு கள்ளிப்பால் கொடுத்துக் கொல்ல நினைத்த தகப்பனை நிர்வானமாகக் குளித்துப் பராமரிக்கும் அச்செயலில் குழந்தையைத் தாய் பராமரிப்பது போன்ற தாய்மை கண்டு நிற்பதா? இல்லை என்னைக் கொல்ல நினைத்தவருக்கே இப்படிப் பணிவிடை செய்யவேண்டிய அடிமைத்தனம் என்று பெண்விடுதலை பற்றிப் பேசுவதா?" என்று கைப்புள்ளை கேட்டுள்ள கேள்வி மிக முக்கியமானது. ஏனென்றால் இது கைப்புள்ளை ஒருவரின் கேள்வி மட்டுமல்ல. நம் சமூகத்தின் பெரும்பகுதியின் பார்வையும் இதுதான். இச்சமூகத்திற்கு வேண்டுவதும் இந்தமாதிரிக் கருத்தமாக்கள் மட்டுமே. தன் அக்காவைக்கொன்று, தன் விருப்பமில்லாமலே தன் வாழ்வையும் அழிக்க முனைந்த அக்காவின் கணவரைக் கொன்றுவிட்டு ஜெயிலுக்குப் போகும் கருத்தம்மாக்களின் போராட்டமும், கண்ணீரும் நம் சமூகத்தின் கண்களில் விழுவதில்லை, மனதிலும் நிற்பதில்லை. எனவேதான் பணிவிடைக் கருத்தமாவை மட்டுமே எடுத்துக்கொண்டு பேசமுடிகிறது. பெண்ணுரிமை, பெண்விடுதலை என்றெல்லாம் இங்கு எழுதிக்கிழித்துக்கொண்டிருக்கும் எனக்கு அந்தப்படத்தை மூன்றுமுறை பார்த்தும், கருத்தமா அவரின் அப்பாவுக்குக் குளித்துவிடுகிற காட்சியில் "கொல்ல நினைத்தவரையே இப்படிக் குளிப்பாட்டிக்கொண்டிருக்கும் கருத்தம்மாவின் அடிமைத்தனம்" என்று நினைக்கத் தோன்றவேயில்லை. மாறாக "ஆண் உசத்தி, பெண் தாழ்ச்சி இல்லை. எனவே பெண்ணுக்குக் கள்ளிப்பால் தரவேண்டிய தேவையில்லை என்பதைக் கருத்தம்மாவின் இந்த அன்பிலிருந்தாவது அந்தப் பெரியவரால் இவ்வளவு வயதுக்குப் பிறகேனும் உணரமுடிந்ததே" என்றுதான் நினைக்கத் தோன்றியது எனக்கு. "ஆனால் பெண்விடுதலை பேசுபவர்கள் கருத்தமாவின் செயலை அடிமைத்தனம் என்பார்கள்" என்று கைப்புள்ளைக்குக் கற்பனையிலெயே முடிவு செய்ய முடிந்திருக்கிறது:))

கணினி இருக்கிறது தட்டச்ச. மொழி இருக்கிறது பகிர்ந்துகொள்ள. விருப்பமும், நேரமும்
அமைந்து நட்புணர்வும் கொண்டு பேசினால் வலைப்பதிவர்கள் சமூகம் நம்
பண்பாட்டிலிருந்து, மதங்கள் வரைக்கும் ஆரோக்கியமான விவாதக்களம் அமைத்து
எவ்வளவோ பேசலாம். செய்யலாம். என்றாலும் இப்போதைக்கு அடியிற்கண்ட
குறிப்புகளோடு மட்டும் இதை நிறைவு செய்கிறேன்.

1. பெண்விடுதலை என்பது சக உயிர் என்ற முறையில் சம அங்கீகாரம்தான் கேட்டு
நிற்கிறது. எனவே "ஜென்ம ஜென்மமாக எனக்குக் கப்பம் கட்டு நீ" என்ற மன்னன்
படத்துப் பாடலை நினைத்துக்கொண்டு விஜயசாந்தி ரஜினியை ஆள்விட்டுக் கட்டி
இழுத்துவருவதுமாதி இங்கு வீதிகளில் பெண்ணுரிமைப் பேச்சுக்காரர்களையும் கற்பனை
செய்துகொள்கிற மாயையிலிருந்து நாம் வெளிவரவேண்டியிருக்கிறது.

2. பெண்விடுதலை பேசுபவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் கணவனுக்குச் சமைப்பதை,
குழந்தைகளுக்கு உடுப்பு போட்டுவிடுவதை, வயதான தாய்தந்தையருக்கு உதவுவதை
எல்லாம் படம் எடுத்துப் போட்டுக்காட்டிக்கொண்டிருப்பது சிரமம். மாரியாத்தா,
கருப்பராயன் கோவில்களில் சூடம் ஏற்றிச் சத்தியம் செய்வதும் சாத்தியமில்லை. அப்படி
முடியாததாலேயே அவையெல்லாம்தான் அவர்களின் பார்வையில் "அடிமைத்தனம்" என்று
முடிவுசெய்துகொள்வதை விரும்பினால் அவரவர் மறுபரிசீலனை செய்யலாம்.

3. சக்தியில் யாரும் கையில் கத்தியோடு நிற்கவில்லை. இது மாற்றுக்கருத்துக்களை
கண்ணியமாகவும், நட்போடும் சுட்டிக்காட்ட விரும்பி அமைக்கப்பட்ட தளம் மட்டுமே
என்பதைத் தாராளமாக நம்பலாம். ஆதலால் "என் தலை போய்விடும்; உன் தலை போகப்
போகிறது" என்ற பயங்களும், கூப்பாடுகளும் இன்றி அவரவருக்குத் தோன்றியதை இந்தக்
காட்டாற்றுச் சுதந்திரப் பெருவெளியில் தைரியமாக எழுதலாம்:))

4. கடைசியாக, நண்பர் காந்தித் தொண்டன் அவர்களின் பின்னூட்டத்தில்
கீழ்க்கண்டவரிகளுக்குச் சொல்ல நினைப்பது.

///பெண்ணுக்குப் பிள்ளைப் பேறும், மாதாந்திரத் தொல்லைகளும் இருப்பதால் அவளை
வீட்டில் இருக்கச் சமூகம் பணித்திருக்கலாம்////

இருக்கலாம். ஆனால் இப்போது இருக்கத் தேவையில்லை. 45 வயதில் விண்ணுக்குப்
போய்வர முயலும் இன்னொரு இந்தியப் பெண்ணினைப் பற்றிக்
கேள்விப்பட்டுக்கொண்டிருக்கிற இக்காலத்தில் பெண்ணின் மாதாந்திர உடலியல் ஒழுங்கு
குறித்தான பேச்செல்லாம் தேவையே இல்லை. பிள்ளைப்பேறும், மாதச் சுழற்சியும்
பெண்ணின் உடலியல்பு. அவை ஓய்வுக்குரியன. ஆனால் ஊனமல்ல ஒன்றும்
செய்யமுடியாமல் உட்கார்ந்துவிடுவதற்கு.

12 comments:

Anonymous said...

From aasath

I have appreciate your expectation about the fellows of Virtual world(net blog).

My quet. is simple. Can win Feminism without a plan, party, Tactics ... etc?

If cant't what is the unique plan for it. If ok please describe it now.

Second, all feminst thoughters have such freedom at family than other Females. Why are fought against that feminine has treated as a Commadity in India.?

Third, why this type of independent personalities have not became the Social activities (Politics like against the mass struggle against Hindu Fascism & Imperialistic USA

--aasath

பூனைக்குட்டி said...

செல்வநாயகி உங்கள் பதிவை பார்த்தேன் என்பதற்கான விஷயமாக இந்தப் பின்னூட்டம்.

//அதற்குப்
பிறகு அம்மாதிரி ஆண்களுக்குப் பொண்டாட்டிதாசன் பட்டம் வழங்கி எழுதப்பட்ட ஒரு
பதிவும் சாட்சிகள்.//

அது எந்த பதிவுங்க சொன்னா நாங்களும் பார்ப்போமுல்ல.

//யாரும் கையில் கத்தியோடு நிற்கவில்லை. இது மாற்றுக்கருத்துக்களை
கண்ணியமாகவும், நட்போடும் சுட்டிக்காட்ட விரும்பி அமைக்கப்பட்ட தளம் மட்டுமே
என்பதைத் தாராளமாக நம்பலாம்//

அப்படியா சொல்லவேயில்லை! ;)

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

செல்வநாயகி அவர்களே சில காலம் முன்பு லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள் டைரக்டர் கௌதமை திட்டியிருந்தார். அவர் திட்டியிருந்த காரணம் அந்த டைரக்டர் தன்னுடைய படத்தில் ஒரு திருநங்கையை மோசமானவராக காட்டியிருந்தது தான்.

அந்தப் படத்தில் காட்டியுள்ளது போல திருநங்கைகள் இன்று சமூகத்தில் இல்லையா?(சமூகம் அவர்களை ஒதுக்கி வைத்ததால் தான் அவர்கள் அப்படி ஆனார்கள் என்பதால் சமூகத்தில் உள்ள அனைவரும் அந்தக் காட்சியின் போது தலை குனிந்திருக்க வேண்டும் என்பது வேறு விஷயம்.) ஆனால் திருநங்கைகள் என்பவர்கள் அது போலவே இல்லவே இல்லை என்பது போல அவர் அங்கு ஆவேசப்பட்டது எனக்குத் தவறாக பட்டது

ஏன் இதனை சொல்கிறேன் என்றால் ஒரு விஷயத்தை அலசும் சமயம் இரு வேறு விதமாகவும் அதனை பார்க்க வேண்டும் எனக்குத் தேவையானவற்றை மட்டுமே பார்ப்பேன் என்பது தவறான கண்ணோட்டம் ஆகும்.

உங்களின் பதிவில் நான் சொன்னதை பொதுமைப் படுத்தி விட்டீர்களோ என்று தோன்றுகிறது

நான் அந்தப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது பெண்ணியம் பேசும் எல்லாப் பெண்களையும் அல்ல என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்.

ஆனால் பெண்ணியம் பேசும் பெண்களில் சிலர் அப்படி இல்லை என்பதை மறுத்தால் அதில் நேர்மை இருக்காது. எதிர்வினைகளே இல்லை இதில் என்பது வேறு சில பிரச்சனைகளுக்கு வழி வகுப்பது போலாகி விடும்.

மற்றபடி உங்களின் பதிவில் எனக்கு முழு உடன்பாடு உண்டு உழைக்கும் பெண்கள் இருக்கும் வீட்டில் ஆண் என்பவனும் சரி சமமாக வேலைகளை பகிர வேண்டும், பெண்களுக்கு இன்று மாதாந்திர தொந்தரவுகள் போன்றவை எல்லாம் பிரச்சனைகளே கிடையாது என்பதை எல்லாம் நூற்றுக்கு நூறு சதவீதகம் ஒப்புக் கொள்கிறேன்.(நான் முந்தைய பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தது கூட எப்படி இந்த நிலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்று சிந்தித்ததன் விளைவே. அதுவும் தவறாக புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது என்றே நினைக்கிறேன்)

உங்களிடம் இருந்து மேலும் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் சில

பல வேறு ரூபங்களில் பெண்களின் மேல் பிரயோகிக்கப்படும் பாலியல் பலாத்காரங்கள், சீண்டல்கள் போன்றவை பற்றி கூட இன்று பலர் அறியாமல் இருப்பது வேதனைக்குறிய ஒரு விஷயம் ஆகும். இது போன்ற பிரச்சனைகளை குறித்த பார்வைகளை எதிர்பார்க்கிறேன்.

கடைசியாக,

குடும்ப அமைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்கும் போட்டி அல்ல. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது குறித்து அல்ல. நான் இதனை செய்வதால் நீ அதனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அப்படி ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதினால் பல பிரச்சனைகளே மிஞ்சும் என்பது என் தாழ்மையான கருத்து. பெண்ணியம் என்பது இது போன்ற விஷயங்களுக்கு துணை போய் விடக் கூடாது. இதனையும் தவறாக அர்த்தம் பண்ணிக் கொள்ள வேண்டாம். சில சமயங்களில் அது போலவும் நடக்கிறது என்பதையே சுட்டிக் காட்டுகிறேன்.

செல்வநாயகி said...

செந்தில்குமரன்,

காந்தித்தொண்டன் என்ற பெயரில் பின்னூட்டியது நீங்களா? இல்லை, நான் இந்தப்பதிவில் உங்களின் பின்னூட்டத்தைத் தவறாகப் பொதுமைப்படுத்தி எழுதியதாகச் சொல்கிறீர்கள். குழப்பம் தவிர்க்க மட்டும் இப்போது இதைக் கேட்கிறேன். மற்றவை பிறகு நிதானமாக நேரம் அமைகையில். நன்றி

Anonymous said...

செல்வநாயகி,

குழந்தைகளை பத்து மாதம் சுமப்பதாலும், பின்னர் சில ஆண்டுகளாவது வளர்ப்புகளில் பெரும் பங்கு வகிப்பதாலும் பெண்களுக்கு வீட்டை பராமரிப்பது, குழந்தைகளுக்கும் கணவனுக்கும், பிற வீட்டு ஆட்களுக்கும் சமையல் செய்து கொடுப்பதிலும் ஈடுபாடும் ஆர்வமும் இயல்பாகவே இருப்பதாக என்னுடைய புரிதல்.

நான்கு இடங்களுக்குப் போய்ச் சுற்றி வருதல், புதிய முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற, சீர்மையான வீட்டு வாழ்க்கைக்கு ஒவ்வாத பணிகளை மேற்கொள்ளுவதில் ஆண்களுக்கு உந்துதல் அதிகம் என்பது இன்னொரு பக்கம்.

இரண்டுக்கும் விதிவிலக்குகளும், கூடுதல் குறைவுகளும் இருக்கலாம். என்னைப் பொறுத்த வரை 'வீட்டுக்குள் என்ன சமைப்பது, எதைச் சாப்பிடுவது, எந்தப் பொருளை எங்கே வைப்பது, எப்படி நேரம் செலவளிப்பது என்று தீர்மானிப்பது' வெளியில் சென்று வாள் சுற்றுவதை விட அதிகமான அல்லது அதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்தது.

வெளி நடவடிக்கைகளில் கிடைக்கும் ஆதாயங்களைப் பயன்படுத்திக் கொண்டு வீட்டை நிர்வாகித்து வந்த பெண்களை ஒடுக்கவும் கொடுமைப் படுத்தவும் ஆணும், ஆணைச் சேர்ந்த பெண்களும் ஈடுபடுவதைத் தடுக்க எழுந்த பெண்ணியக் குரல்கள், 'நாம் வெளிவேலைகளை விட்டு ஒதுங்கி இருப்பதால்தானே இந்தக் கொடுமைகள்' என்று காரணப்படுத்தியோ

அல்லது

இயல்பாகவே பெண்களுக்கும் விண்ணை அளக்கும் ஆர்வமும் இருப்பதாலோ

பெண்களும் வெளி உலகில் வேலை செய்வது நடைமுறைக்கு வந்துள்ளது. வெளி வேலைகள் உடல் சார்ந்த உழைப்பாக இல்லாமல் மூளை வேலைகளாக மாறி விட்ட பொருளாதாரக் காரணிகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

1. பெண் வெளியே போய் வேலை செய்யும் போது ஆணும் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்வதுதானே சரி. வெளியில் போய் செயலாற்றுவதால் பெண்ணுக்குக் கிடைக்கும் புதிய உரிமைகளுக்கு ஈடாக வீட்டில் வேலை செய்வதால் ஆணுக்கு நிறைவுகள் கிடைப்பதில்லை (அதுதான், நான் குறிப்பிட்டிருந்த சொந்த அனுபவம்). ஆணின் இயல்புக்கு எதிரான வேலைகள் என்பதால் இருக்கலாம்.

2. (கொஞ்சம் அப்பட்டமான கருத்து, சரியான நோக்கில் புரிந்து கொண்டு பதிலளியுங்கள்)
வீடு என்பது பெண்ணால் உருவாக்கப்பட்டு பெண்ணுக்கு தேவையான இடம். அதற்குள் ஆணை அன்பால் கட்டிப் போட்டு குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வாழ்க்கைத் துனையாக ஆணையும் இணைத்துக் கொள்வது இல்லறம். இப்போது வரையறைகள் மாறும் போது ஆண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன வலுவான காரணம் இருக்கும்?

3. கொடுமைப்படுத்தப்படும் பெண்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள சமூகக் கருத்தோட்டங்கள், சட்டங்கள் இவற்றை மேலே சொன்னவாறு பல நிலைகளில் சரிக்குச் சமமாகச் செயல்படும் பெண் ஆணுக்கு எதிராகப் பயன்படுத்தும் போது என்ன தீர்வு?

அன்புடன்,

மா சிவகுமார்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

அது என்னுடைய இன்னொரு பிளாக்கர் ஐடி. போன பதிவில் செந்தில் குமரன் என்று பின்னூட்டமிட நினைத்து காந்தித் தொண்டன் என்றும் இந்த பின்னூட்டத்தில் காந்தித் தொண்டன் என்று பின்னூட்டமிட நினைத்து செந்தில் குமரன் என்று பின்னூட்டமிட்டு விட்டேன்.

:-DDDDDD.

செல்வநாயகி said...

சிவக்குமார்,
உங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி. மாற்றுக்கருத்துக்களையும் தேர்ந்த நடையில் சொல்லமுடிகிற உங்களின், செந்தில்குமரனின் மொழிகள் பிடித்திருக்கின்றன. விரிவாகப் பின்னர்.

ஆசாத்,
முதன்முறையாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன். மறுமொழிக்கு நன்றி. பெண்ணியத்திலிருந்து மேலும் விரிவான இடங்களைத் தொடுகிறீர்கள் என நினைக்கிறேன். எனக்குப் பதில் சொல்ல உள்வாங்கிடும் வகையில் இன்னும்கூட விரித்து நீங்கள் நினைப்பதை முடிந்தால் எழுதுங்களேன்.

வசந்த் said...

செல்வநாயகி அவர்களே,

நல்ல பதிவு,

// இக்காலத்தில் பெண்ணின் மாதாந்திர உடலியல் ஒழுங்கு குறித்தான பேச்செல்லாம் தேவையே இல்லை. பிள்ளைப்பேறும், மாதச் சுழற்சியும்
பெண்ணின் உடலியல்பு. அவை ஓய்வுக்குரியன. ஆனால் ஊனமல்ல ஒன்றும்
செய்யமுடியாமல் உட்கார்ந்துவிடுவதற்கு //

நன்றாக சொல்லி உள்ளீர்கள்..

நன்றி
வசந்த்

செல்வநாயகி said...

வசந்த்,
உங்கள் மறுமொழிக்கு நன்றி.

Anonymous said...

I am aasath

I can't know that to describe my previous question? ... If possible, can anyone tell it now.

Without any Party (political) how feminism will success?

On Kairanchi Massacare also, Females have treated as a property of Dalits. How you accept it?

All of you (so-called female feminists) have such small freedom in your home (ie, family). Then why you can't come in front of the peasants' struggle, Peoples struggle, .... Govt. employees struggle against privitization, trying of form a Union at IT employees also. I need the explanation?

செல்வநாயகி said...

நண்பர் ஆசாத்,

உங்களின் பார்வைகளுக்கான பின்னணியை அறிய விரும்பியே உங்களை மேலும் எழுதக் கேட்டது. நீங்கள் அப்படி விரிவாக

எழுதாதபோது நான் பதில்சொல்லிக்கொண்டிருப்பது இருவரும் ஒரு புள்ளியில் இல்லாமல் அவரவர் திசைகளில் பேசிக்கொண்டிருக்க

வித்திடலாம். இப்போது நீங்கள் மீண்டும் விளக்கம் வேண்டும் என்று (மட்டுமே) கேட்டிருப்பதால் இதை எழுதுகிறேன்.

பெண்விடுதலை பற்றிய சிந்தனைகள் ஒரே இயக்கமாக ஒரு குடையின்கீழ் வராதிருப்பினும் சமீபத்திய நூற்றாண்டுகளில் இதுபற்றிய

விழிப்புணர்ச்சி ஏற்பட்டு அதன் விளைவாக உலகெங்கும் தோன்றிய சிறுசிறு இயக்கங்களின் எழுச்சிகளும், போராட்டங்களுமே இன்று

பெண்களுக்கு ஆதரவான பல சட்டங்கள்வரை கொண்டுவந்திருக்கிறது. நம் ஊரிலும் இயங்கிவரும், அரசுசார்ந்த மகளிர் ஆணையங்களில்

இருந்து, கட்சிசார்ந்த ஜனநாயக மாதர் இயக்கங்கள் வரை இதில் சேரும்.. அடிமட்டப் பெண்களின் அன்றாட வாழ்வாதாரப்

பிரச்சினைகளைக் களைவதில் சிறந்து விளங்கும் இன்றைய மகளிர் சுய உதவிக்குழுக்களைக்கூட நான் இதனடிப்படையில் பார்க்கிறேன். பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவருகிற, அவர்களுக்கு வேண்டியது செய்கிற பல சமூக இயக்கங்களையும் பார்க்கிறோம். இவையெல்லாம் தத்தம் பணிகளில் ஒருங்கிணைந்து செயலாற்றும்போது அவற்றின் பலம் இன்னும் கூடும் என்பது உண்மையே.

எங்களைப்போல் பெண்ணுரிமைபற்றிப் பேசுகிற பெண்கள் வீதிக்குவந்து போராடவேண்டும் என்கிற உங்களின் ஆவல் பாராட்டுதலுக்குரியது. இப்படியான பெண்கள் உங்களின் கண்களில் விழுகிறவண்ணம் வெளியில்வந்து போராடவில்லை என்பதால் அவர்கள் ஒன்றுமே செய்யவில்லை என்று பொருள் கிடையாது. சிறுசிறு பணியாகவேனும் அவரவருக்கு முடிந்த தளங்களில் இயங்குகிறவர்கள் நிறைய உண்டு. என்றாலும் முழுமையாக அரசியல், சமூகத் தளங்களுக்கு பெண் தன் பங்களிப்பை வழங்க முன்வராமைக்குப் பலகாரணங்கள் உள்ளன. இங்கெல்லாம் இயங்கும் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் எப்படியானவை என்பதை நாம் அறிவோம். வேலையா, குடும்பமா என்று வருகிறபோதே வேலையைவிட்டுக் குடும்பத்திற்கு மட்டுமே முன்னுரிமை தருவதற்கே இன்றும் பெண்கள் வலியுறுத்தப்படுகிற சமூகத்தில் பொதுவாழ்வில் இன்னும் பெண்களின் பங்கு அதிகமாக, பெண்களைவிடவும் சமூகமே தன் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு ஜெயிலுக்குப் போன பெண்களில் இருந்து இன்று ஒரு போராளியாகக் களத்தில் இருக்கிற மேதாபட்கர் வரை உண்டு.

பெண்விடுதலை பேசுபவர்கள் ஏன் இந்து பாசிசத்திற்கெதிராகவெல்லாம் போராடவில்லை என்கிற உங்களின் முதல் பின்னூட்டக் கேள்விக்கு என் பதில்:-

மதங்களில் இந்து மதம் என்றில்லை, பொதுவாக எல்லா மதங்களுமே இன்றும் பெண்ணுக்குரிய அங்கீகாரங்களை வழங்கிவிட்டதாகச் சொல்லமுடியாது. பெண்ணடிமையைப் பேணிக்காப்பதில் மதங்களுக்கு நிறையப் பங்குண்டு. அவற்றிற்கெதிரான பெண்களின் குரல்களையே இன்னும் அவர்கள் முழுமையாக எழுப்பமுடியாவண்ணம் அங்கங்கு மதங்களின் அரண்களாய் மனிதர்களும், மத அமைப்புகளும் நின்றுகொண்டிருக்கையில் அடுத்த கட்டம் நோக்கிய பயணங்களுக்குப் பெண்கள் ஏன் வரவில்லை என்று கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை.

எங்கெங்கோ சுற்றிக் கடைசியில் ஐடி பணியாளர்களின் சங்கம் அமைப்பதிலும் பெண்விடுதலை பேசுபவர்கள் ஏன் முன்வரவில்லை என்று முடித்திருக்கிறீர்கள்:)) உலகின் எல்லாவேலைகளையும் இனிப் பெண்விடுதலை பேசுபவர்கள்தான் ஆரம்பித்து வைக்கவேண்டும்போல் தெரிகிறதே:)) இந்த இடுகையின் அடுத்த பாகத்தில் நண்பர் செந்தில்குமரனுக்குச் சொன்னதுதான் உங்களுக்கும். பெண்விடுதலை என்பதே பெண்கள் மட்டும் செய்யவேண்டிய வேலை அல்ல. ஒடுக்கப்பட்டவர்கள் சமத்துவம் பெறுவதுதான் சமூகத்தின் ஆரோக்கியத்துக்கு நல்லது. அவ்வகையில் பெண்விடுதலை என்பதும் பெண்களின் பிரச்சினை மட்டுமேயில்லை. அது சமூகத்தின் பிரச்சினை. அதைக் களைவதில் ஆண்கள், பெண்கள் எல்லோருக்குமே சமமான கடமைகள் உண்டு. ஐடியில் எனக்குத் தெரிந்து மேலாளர்களாகவும், உதவி மேலாளர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பான்மை ஆண்களே. அதிலேயே இன்னும் சமத்துவம் முழுமையாக வந்தபாடில்லை. இதில் சங்கம் அமைக்க மட்டும் பெண்கள் வந்து போராடவேண்டும் என்றால் எப்படி:)) ஆனாலும் அப்படி ஒரு கருத்து செயல்வடிவம் பெறும்போது அத்துறைசார்ந்த பெண்களும் அதற்குக் குரல்கொடுப்பார்கள் என்றே நான் நம்புகிறேன். நன்றி.

Anonymous said...

i am aasath

You thought that your view is for the way of acheive of freedom to Feminine gender.

Do Any struggle against suffering in world is done by feminist or Comminist?

So everybody in the world whom suffered by class/gender/community can join with them to fight against the Backward thoughts/System. Then, which weapon could guide to us?

Marxism-Leninism or Like Self-support groups, or NGOs of Patkar.

Please form the anger to the semi-feudal society to prevent the females' social activities. Individuals anger haveen't good enough. It forms a plan, party with whom is fighting for the sufferers. Through this struggle, all feminine genders also growth their soccial activities as civilizing Homozapeans.

You got such minimized rights from your former rebelions. What is the consequent history for it without plan?

Shall you justify?

Without promotion of Manager in IT field, why females to try to form a union for struggle. If female or male got it, they should corrupted by the neo-Capitalist societies Strategy. He don't come in front of the struggle.

-aasath